இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
கோவையில் மொத்தம் 2 இடங்களில் மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. அங்குள்ள மதிமுக அலுவலகத்தில் 18 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் 24 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தினமும் ஏராளமான மாணவர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 500 இன்று காலை முதல் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளனர்.
காரைக்குடியில் உண்ணாவிரதம் இருந்த அழகப்பா அரசுக் கலை கல்லூரி மாணவர் விக்னேஷ்வரன் உடல் நிலை மோசம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்ணாவிரதம் இருந்து வரும் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்களின் பெற்றோரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
மதுரை தல்லாக்குளத்தில் தபால் தந்தி அலுவலகம் மாடியில் ஏறிய சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்து இருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment